என் உரையை, ஒரு சம்பவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்: இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சி திட்டமிடுநர், என்னை தொலைபேசியில் அழைத்தார். ஏனென்றால், நான் ஒரு பொதுக் கூட்டத்தில், பேசவிருந்தேன். அவர் என்னை அழைத்து சொன்னார் "எனக்கு ஒரு சிக்கல் உள்ளது, எப்படி உங்களை பற்றிப் இந்த சிறிய அழைப்பிதழில், எழுத வேண்டுமென்று" நான் நினைத்தேன், "சரி, என்ன சிக்கல்?" அவர் சொன்னார், "நீங்கள் பேசி நான் பார்த்துள்ளேன். நான் உங்களை ஒரு ஆராய்ச்சியாளர் , என்று அழைத்தால், நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்று பயப்படுகிறேன். ஏனென்றால், சுவாரசியம் இல்லாமலும், தங்களுக்கு சம்பந்தம் இல்லாததுமாக, மக்கள் கருதுவார்கள். (சிரிப்பு) சரி. பிறகு அவர் கூறினார், "ஆனால், உங்களது பேச்சில், எனக்கு பிடித்தது என்னவென்றால் நீங்கள் ஒரு கதை சொல்லுபவர்." அதனால், நான் உங்களை ஒரு கதை சொல்பவர் என்றே அழைக்கப் போகிறேன்." கல்வியாளராக இருக்கும் நானோ, சற்றுத் தடுமாறி, "என்ன!!? என்னை என்னவென்று அழைக்க போகிறீர்கள்?", என்று கேட்டேன் அவர் சொன்னார், "நான் உங்களை ஒரு கதை சொல்லுபவர் என்று அழைக்கப் போகிறேன்." அதற்கு நான், "ஏன் என்னை ஒரு மாயாஜால மந்திரவாதி, என்று அழைக்கலாமே?" என்றேன். (சிரிப்பு) "சரி, இதைப் பற்றி, ஒரு கணம் யோசிக்கிறேன்", என்றேன் மனதில் தைரியத்தை வரவழைத்து, நான் சிந்தித்தேன். ஆம், நான் ஒரு கதைசொல்பவள் தான். பண்புகளைச் சார்ந்த ஆராய்ச்சி செய்பவள் நான். கதைகளை சேகரிபவள் நான்; அதை தான் நான் செய்கிறேன். கதைகள் எல்லாம், உயிருள்ள தகவல்கள் தானே. அப்படி என்றால், நான் ஒரு கதை சொல்லுபவள் தானே. நான் அவரிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் இப்படி செய்யக் கூடாது? "நீங்கள் என்னை, ஆராய்ச்சியாளர் - கதைசொல்லுபவர், என்று அழைக்கலாமே?" அவர் சிரித்துவிட்டு "அப்படி ஒன்று உள்ளதா!?" என்று கூறினார். (சிரிப்பு) அவ்வகையில், நான் ஒரு கதை சொல்லும் ஆராய்ச்சியாளராக உங்களிடம் பேச வந்துள்ளேன், இன்று -- விரிகின்ற கண்ணோட்டங்களைப் பற்றி நாம் பேச போகிறோம் -- மற்றும் நான் உங்களுக்கு சில கதைகளை சொல்லப் போகிறேன். என் ஆராய்ச்சியைச் சார்ந்த கதைகள் அவை. என் கண்ணோட்டத்தை விரிவுப்படுத்திய கதைகள். நான் வாழும் முறையை, நான் அன்பு கொள்ளும் முறையை, வேலை செய்யும் முறையை, வளர்ப்பு முறையை மாற்றிய கதைகள்.
என் கதை இங்கு ஆரம்பிக்கிறது. என் இளமையில், ஒரு ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது முதல் ஆண்டில், என் பேராசிரியர் எங்களிடம் சொன்னார், "இதை புரிந்துக் கொள்ளுங்கள், ஒரு பொருளை அளவிட முடியாது என்றால், அந்த பொருள் இல்லை என்று அர்த்தம்" அது அவர் விளையாட்டுத்தனமாக சொன்னார் என்று எண்ணினேன். "ஒ! அப்படியா?" என்றேன். "ஆம், நிச்சயமாக!", என்றார். நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் நான், சமூக சேவையில், முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன். முனைவர் பட்டமும், பெறவிருந்தேன். என் முழு கல்விப் பணியில், என்னை சுற்றி இருந்த மக்கள், நம்பியது என்னவென்றால், குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் நம்பியதோ, வாழ்க்கை குழப்பமானது, குளறுபடியானது. அதை சுத்தப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி, ஒரு பெட்டியில், அழகாகப் போட்டு வைக்கலாமென்று. (சிரிப்பு) அப்படியொரு நோக்கம் கொண்ட நான், தேர்ந்தெடுத்த தொழிலோ, சமூக சேவை. சமூக சேவையில் இருப்போர், சொல்வது போல சேவையில் உள்ள அசௌகரியங்களைத் நாம் தழுவிக் கொள்ள வேண்டும். எனக்கோ, அசௌகரியங்களைத் தகர்த்து, இலக்கு பாதையிலிருந்து, அகற்றிவிட்டு வெற்றி பெறவேண்டும், என்பதே, தாரக மந்திரமாக இருந்தது. உத்வேகத்துடன் இருந்தேன். நான் சிந்தித்தேன், "ஆம், இது தான் என் வாழ்க்கைப்பணி!" நான் குழப்பமான, கடினமான விஷயங்களை ஆராய்ச்சி செய்ய ஆர்வப்படுகிறேன். குழப்பங்களை அகற்றி அதனை புரிந்து கொள்ள வேண்டும். காரணக் காரியங்களை கண்டுபிடித்து, முக்கியமானவைகளின் விதிகளை, கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும்.
மனிதர்களிடம் உள்ள இணைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். பத்து வருடங்களாக, சமூக சேவகராக நீங்கள் இருந்தால், நீங்கள் இதை உணர்வீர்கள். மற்றவர்களிடம் நமக்குள்ள இணைப்பு, இருப்பதால் தான் நாம் இங்கு இருக்கிறோம். அதுதான், நம் வாழ்விற்கு, அர்த்தமும், நோக்கமும் தருகிறது. இதுதான், அனைத்துக்கும் விளக்கம் கொடுக்கிறது. நீங்கள் யாரிடம் பேசினாலும், சமுக நீதி, மன நலத்துறை, தாக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களாகட்டும், நாம் அறிவது, என்னவென்றால் இணைப்பு, அதாவது, மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் தான் -- நரம்பியல் ரீதியாகவும், நம்மை உருவாக்கி உள்ளது -- அதுவே, நாம் இங்கு வாழ்வதற்கு காரணமாகவும் உள்ளது. அதனால், நான் சிந்தித்தேன், நான் 'இணைப்பில்' இருந்து தொடங்கலாமென்று. சரி, நீங்கள் இந்த சூழ்நிலையை அறிவீர்கள். உங்களுடைய மேல் அதிகாரி, மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் உள்ள 37 நல்ல விஷயங்களைப் பாராட்டுக்கிறார். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும், நீங்கள் கவனம் செலுத்தி வளரலாம், என்கிறார். (சிரிப்பு) நீங்களோ, கவனம் செலுத்த சொன்ன விஷயத்தை மட்டும், யோசிப்பீர்கள். அல்லவா? என்னுடைய ஆராய்ச்சியும், அப்படித் தான் போனது. ஏனென்றால், நீங்கள் மக்களிடம் அன்பு பற்றிக் கேட்டால், அவர்களுடைய ஆழ்ந்த துயரத்தை பற்றி கூறினர். மக்களிடம் சொந்தம் கொள்ளுதல் பற்றிக் கேட்டால், கடும் வேதனை தந்த அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள், ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி பேசுவார்கள். மக்களிடம் இணைப்பைப் பற்றி கேட்டால் இணைய முடியாமல், துண்டிக்கப்பட்ட கதைகளை சொல்வார்கள்.
மிக விரைவாக, ஆராய்ச்சி ஆரம்பித்த ஆறு வாரங்களில், ஒரு பெயரிட முடியாத விஷயமொன்று, தோன்றத் தொடங்கியது. இணைப்பு என்பது என்னவென்று, வெளிப்படையாக்கியது அது, எனக்கு புலப்படாத, என்றும் பார்த்திராத முறையில். நான் ஆராய்ச்சியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்து, நான் இதை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தேன். அது என்னவாக இருந்தது என்றால், அவமானம் என்கிற உணர்ச்சி தான். அவமானத்தை, நாம் எளிதில் புரிந்துக் கொள்ளலாம், மற்றவர்களிடம் இணைய முடியாமல் போய்விடுவோம், என்கிற பயம் என்று. என்னைப் பற்றி ஏதேனும் ஒன்று, உள்ளதா, அதை மற்றவர்கள் பார்த்தால் அல்லது அறிந்தால், என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன் ஆக்கிவிடும். நான் உங்களுக்கு சொல்ல போகிற விஷயங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியவை; நாம் அனைவரும் அதை கொண்டுள்ளோம். அவமானத்தை அனுபவிக்க முடியாதவர்கள், மனிதாபிமானம், இணைப்பு ஆகியவற்றிற்கான ஆற்றல் இல்லாதவர்கள். அவமானத்தை பற்றி யாரும் பேச விரும்புவதில்லை எவ்வளவு குறைவாக அதை பற்றி நீங்கள் பேசுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களிடம் இருக்கிறது. அவமானத்தின் அடித்தளத்தில் உள்ள, "நான் அந்தளவிற்கு, சிறந்தவன் அல்ல" என்ற உணர்வை நாம் அனைவரும் அறிவோம் "நான் அவ்வளவு அதுவாக இல்லை, இதுவாக இல்லை. நான் அவ்வளவு ஒல்லியாக இல்லை, அவ்வளவு பணக்காரனாக இல்லை, அவ்வளவு அழகாக இல்லை, அவ்வளவு சாமர்த்தியமாக இல்லை, அவ்வளவு பதவி பெற்றவனாக இல்லை." இதற்கு அடிப்படையாக உள்ளது, கடும் வேதனை தரக்கூடிய, வடுபடத்தக்க தன்மையே. இது பின்வரும் கருத்தைச் சார்ந்தது. மற்றவர்களுடன் இணைந்து, சேர வேண்டுமாயின், மற்றவர்கள் நாம் எப்படிப்பட்டவர்கள், என்பதை காண அனுமதிக்க வேண்டும் உண்மையாக, நாம் யார் என்பதை, அவர்கள் காண வேண்டும்.
நீங்கள் அறிவீர், நான் இதை எப்படி உணருவேன் என்று. வடு படும் நிலையை, வெறுக்கிறேன். நான் யோசித்தேன். சரி, இது ஒரு வாய்ப்பு எனக்கு. என் அளவுக் கோல் கொண்டு, இதை அடித்து பின்னே தள்ளி விட வேண்டும். நான், உள்ளே சென்று, இதனை பற்றி கண்டு அறியப்போகிறேன். நான் ஒரு வருடம் செலவிடப் போகிறேன். அவமானம் என்ன என்பதை, உடைத்து அறிய போகிறேன். வடுபடத்தக்கத் தன்மை, எப்படி வேலை செய்கிறது, என்பதை புரிந்துக் கொள்ள போகிறேன் என் புத்திசாலித்தனத்தினால், இதனை வெல்ல போகிறேன். நான் தயாராக இருந்தேன். ஆர்வமுடன் இருந்தேன். உங்களுக்கே தெரியும், இது நன்றாக முடியாது என்று. (சிரிப்பு) உங்களுக்கு இது தெரியும். அவமானத்தைப் பற்றி, நான் நிறைய சொல்லலாம். அப்படியானால், நான் உங்களின் நேரத்தை கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆனால், உங்களிடம் ஒன்று சொல்ல போகிறேன், அது தான் இதற்கு விளக்கம் கொடுக்கிறது. நான் கற்றுக்கொண்டவற்றில் இது தான் மிக முக்கியமானவையாகவும் இருக்கலாம், பத்து வருட ஆராய்ச்சியில். எனது ஒரு வருடம் ஆறு வருடங்கள் ஆனது. ஆயிரக்கணக்கான கதைகள், நூற்றுக்கணக்கான, நீண்ட நேர்காணல்கள், மையக் குழுக்கள். ஒரு நேரத்தில், மக்கள் அவர்களின் தினக் குறிப்புகளை, அனுப்பத் தொடங்கினர். அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கூட அனுப்ப தொடங்கினர் -- ஆயிரமாயிரமான, தகவல் துணுக்குகள், ஆறு வருடங்களில். ஒரு விதமாக, நான் இது என்னவென்று அறிய தொடங்கினேன்.
அவமானம் என்றால் என்ன, என்பது புரியத் தொடங்கியது, இவ்வாறு தான், அது வேலை செய்கிறது என்று. ஒரு புத்தகம் எழுதினேன். ஒரு கோட்பாட்டை வெளியிட்டேன், ஆனால் ஏதோவொன்று, சரியாக இல்லை -- அது என்னவென்று பார்த்தேன். நான் நேர்காணல் செய்த, மக்களை தோராயமாக, எடுத்துக் கொண்டு, அவர்களை, இரு வகையாக பிரித்தேன். உண்மையாக, அவர்கள் தகுதியுடையவர்கள் என்ற உணர்வை கொண்டவர்கள் -- அது தான், அடிப்படையாக உள்ளது, தகுதியுடையவர்கள் என்ற உணர்வு -- அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள் -- மற்றொரு வகை, இவ்வனைத்துக்காகவும் போராடுபவர்கள், போதுமானளவுக்கு நன்றாக உள்ளார்களா என்று தங்களையே சந்தேகப்படுபவர்கள். இவர்களில் ஒரேயொரு மாறுநிலை மட்டுந்தான் உள்ளது. அது தான், இவர்களை வேறுபடுத்துகிறது, அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள் மற்றும் அதற்காக போராடுபவர்கள். அது என்னவென்றால், அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள், தாங்கள், அன்பிற்கும், சொந்தம் கொள்ளுதலுக்கும் தகுதியானவர்கள், என்று நம்புபவர்கள். அவ்வளவு தான். அவர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள். எனக்கு, மிகக் கடினமான ஒன்றாக, நம்மை மற்றவரிடம் இணைய தடுக்கும் ஒன்றாக, அமைவது பயம், நாம் மற்றவரிடம் இணைய, சேர்ந்திருக்க தகுதியானவர்கள் கிடையாது, என்ற பயம், என்று விளங்கியது. அதை, தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், என்று உணர்ந்தேன். அதனால், நான் என்ன செய்தேனென்றால் நான் அனைத்து நேர்காணல்களையும் எடுத்துக் கொண்டேன். தகுதியுடைமை, மற்றும் அவ்வாறு வாழும் மக்களைப் பற்றிய நேர்காணல்களை, மட்டும் பார்த்தேன்.
இவர்களிடம், எதேனும், பொதுவாக உள்ளதா? எனக்கு எழுது பொருள்கள் மீது, ஒரு லேசான போதை உள்ளது, ஆனால், அது வேறு சொற்பொழிவிற்காக, விட்டு விடலாம். நான் ஒரு மணீலா உறையையும், ஒரு குறிப்பு எடுக்கும் எழுதுகோளையும், எடுத்துக் கொண்டேன். சரி, இந்த ஆராய்ச்சியை என்னவென்று அழைக்கலாம்? என் மனதில் தோன்றிய முதல் வார்த்தைகள், முழுமனதோடு இருப்பவர்கள். இவர்கள், தாங்கள் தகுதியானவர்கள் என்ற ஆழமான உணர்வுடன், முழுமனதோடு வாழ்பவர்கள். அந்த மணீலா உறையின் மேல் எழுதினேன். நான் அதிலிருக்கும், தகவல்களை பார்க்க தொடங்கினேன். நான் அதை முதலில் நான்கு நாட்களாக தீவிர தகவல் ஆய்வு, செய்தேன். நான் திரும்பிச் சென்றேன். நேர்காணல்களை எடுத்தேன். கதைகளை எடுத்தேன். சம்பவங்களை எடுத்தேன். இதில் உள்ள முக்கிய கருத்து என்ன? இதில் தோன்றும் வடிவமைப்பு என்ன? என் கணவர், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். ஏனென்றால், எனக்கு 'ஜாக்சன் பொல்லாக்' போல் பித்து பிடித்ததாய் நான் எழுதிக் கொண்டே இருப்பேன், ஆராச்சியாளர்-ரகத்தில். நான், கண்டறிந்தது என்னவென்றால். அவர்களிடம், உள்ள பொதுவானது, ஒரு தைரிய உணர்வு. ஒரு நிமிடத்தில் தைரியம் மற்றும் வீரத்தை வேறுபடுத்திக் காட்ட எண்ணுகிறேன். தைரியம், அதற்கான பொருள் வரையறை, ஆங்கிலத்தில், முதன்முறையாக பழக்கத்தில் வந்த போது -- லத்தின் மொழியில், இருதயம் என்ற பொருள் கொண்ட, 'கொர்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது -- அதற்கான, அசல் வரையறை, முழுமனதோடு, நீங்கள் யார் என்பதைச் அழகுறச் சொல்வதாகும். அந்த மக்களிடம், இருந்தது, தைரியம் மட்டுமே. குறைபாடுகளுடன், இருக்கக்கூடிய தைரியம். அவர்களிடம், ஒரு இறக்க உணர்ச்சி இருந்தது. முதலில், தங்களுக்கு தானே அன்பாக இருந்தார்கள், பிறகு மற்றவர்களிடம். ஏனென்றால், நாம் பிறரிடம் இறக்கத்துடன் பழக முடியாது, நாம் நம்மையே, அன்பாக பரிவுடன் நடந்து கொள்ளாவிட்டால். இன்னும், அவர்களிடம் இணைப்பு இருந்தது, -- அது தான், கடிமான ஒன்று -- நம்பகத்தன்மையால் வந்த இணைப்பு. தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதை விட்டுக்கொடுக்கவும் முனைந்தார்கள், அவர்கள் அவர்களாக இருப்பதற்காக. அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும், மற்றர்வர்களுடன் இணைந்து வாழ்வதற்கு.
அவர்களிடம் இருந்த ஒரு ஒற்றுமை இது தான். வடுபடத்தக்க தன்மையை, முழுமையாக தழுவினார்கள். அவர்கள் நம்பியது என்னவென்றால் எது அவர்களை காயப்படுத்தக் கூடியவையாக இருந்ததோ, அதுவே அவர்களை அழகுபடுத்தியது. அவர்கள் காயப்படுவது சுகமானதாக கருதவில்லை, அது மிகவும் வேதனை தரக்கூடியதாகவும் கருதவில்லை -- அவமானத்தை பற்றி அறிய நடத்திய நேர்காணல்களிலிருந்து நான் இதைத்தான் அறிந்தேன், . அவர்கள் அது தேவையானது, என்று பேசினார்கள். விருப்புடன் முனைவதை பற்றி பேசினார்கள். "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று முதலில் சொல்ல முற்பட வேண்டும். விருப்பத்துடன் ஒன்றை செய்ய முனைய வேண்டும், எந்தவித உத்தரவாதமுமின்றி, விருப்பத்துடன் முனைய வேண்டும், பொறுமையுடன் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருக்க, உங்களுடைய மாம்மொகிரம் முடிந்த பின். ஒரு உறவில், முதலீடு செய்ய முனைந்தார்கள், கைக்கூடுமா கூடாதா, என்று பாராமல். இதை அவர்கள் அடிப்படையாக கருதினார்கள்.
நான் அதை, தனிப்பட்ட வகையில், துரோகம் என்று எண்ணினேன். நான் நம்பவில்லை என்னுடைய கடப்பாட்டை ஆராய்ச்சியில் மீது வைத்திருந்தேன் -- ஆராய்ச்சியின் வரையறை என்னவென்றால், கட்டுப்படுத்துவதும் கணிப்பதும் ஆகும்; நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை ஆய்வு செய்து, தெள்ளத் தெளிவான காரண காரியங்களை அறிந்து, கட்டுப்படுத்தி எதிர்வுகூறுவது. ஆனால், இப்போது என்னுடைய பணியான, கட்டுபடுத்துவதும் கணிப்பதும், எனக்கு அளித்த பதிலோ, வாழ்க்கையை வடுபடத்தக்கத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று. அதாவது, கட்டுப்படுத்துவதையும், எதிர்வுகூறுவதையும் நிறுத்த வேண்டும். இதனால் ஒரு சிறிய பிரச்சனைக்கு உள்ளானேன் -- (சிரிப்பு) -- ஆனால் அது நிஜத்தில் இப்படி தான் தோற்றமளித்தது. (சிரிப்பு) ஆம், அப்படி தான். இதை ஒரு பிரச்சினை என்று கூறினேன். எனது வைத்தியர் இதை ஒரு ஆன்மிக விழிப்புணர்ச்சி என்றார். பிரச்சினை என்று சொல்வதை விட, ஆன்மிக விழிப்புணர்ச்சி என்று சொன்னால், நன்றாகவே இருக்கிறது, ஆனால் அது ஒரு பிரச்சினை தான் என்று உங்களிடம் உறுதிப்படுத்துகிறேன். என்னுடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, ஒரு வைத்தியரைத் தேடி போனேன். உங்களிடம் இதை சொல்ல விரும்புகின்றேன்: நீங்கள் யார் என்பதை நீங்களே அறிவீர்கள், உங்களுடைய நண்பர்களை நீங்கள் அழைத்து கேட்டால், "நான் ஒரு வைத்தியர் பார்க்க வேண்டும். யாரையாவது நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?" என்று. ஏனென்றால், என் நண்பர்கள் ஐந்து பேர், "ஐயோ. நான் உனக்கு வைத்தியர் ஆக மாட்டேன்" என்றனர். (சிரிப்பு) நானோ, "அப்படி என்றால்?" அவர்கள் அதற்கு, "நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால். நீ உன்னுடைய அளவுக்கோலை கொண்டு வந்துவிடுவாய்." நானோ, "சரி." என்றேன்.
நான் ஒரு வைத்தியரைக் கண்டறிந்தேன். டயானாவிடம் நடந்த முதல் சந்திப்பில்,-- நான் ஒரு பட்டியலை கொண்டுவந்தேன், முழுமனதுடன் வாழ்பவர்கள், எம்முறையில் வாழ்கிறார்கள் என்ற பட்டியல். அமர்ந்தேன், அவர் சொன்னார், "எப்படி இருக்கீங்க?" நான் சொன்னேன், "நான் நன்றாகவே உள்ளேன்" அவர் சொன்னார், "சரி, என்ன நடந்தது?" இவர் மற்ற வைத்தியர்களைப் பார்க்கும் வைத்தியர். நாம் அத்தகையவர்களிடம் செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் நாம் சொல்லும் கதைகளை கேட்டு உண்மை அறிவார். (சிரிப்பு) நான் சொன்னேன், "சரி, இதை தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்." அவர் சொன்னார், "என்ன போராட்டம்?" சொன்னேன், "வடுபடும் தன்மை சார்ந்த பிரச்சனை ஒன்று உள்ளது. வடுபடத்தக்க தன்மை தான், கருவாக உள்ளது, அவமானத்திற்கும் , பயத்திற்கும் மற்றும் நம் தகுதியுடைமையின் போராட்டத்திற்கும். ஆனால், அது தான் பிறப்பிடமாக உள்ளது, மகிழ்ச்சிக்கும், படைபாற்றலுக்கும், பிறரிடம் சொந்தம் கொண்டாடுவதற்கும், அன்பிற்கும். இதனால் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்று நினைக்கிறேன், எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது." நான் சொன்னேன். "ஆனால், இது தான் விஷயம், என்னுடைய குடும்பத்தை பற்றி பேச தேவையில்லை, என்னுடைய குழந்தைப்பருவம் பற்றி பேச தேவையில்லை." (சிரிப்பு) "எனக்கு சில உத்திகள் மட்டுமே தேவை." (சிரிப்பு) (கைத்தட்டல்) நன்றி. அவரோ, இப்படி செய்தார். (சிரிப்பு) நான் பிறகு சொன்னேன், "இது கெட்டது, தானே?" அவர் சொன்னார், "இது நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது." (சிரிப்பு) "இது என்னவாக இருக்கிறதோ, அதுவாக தான் இருக்கிறது." நான் சொன்னேன், "கடவுளே! இது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது."
அப்படி தான் இருந்தது. அப்படி இல்லாமலும் இருந்தது. ஒரு வருடம் எடுத்துக் கொண்டது. மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்களே அறிவீர்கள். வடுபடத்தக்க தன்மையும், மென்மையும் தான் முக்கியம் என்று அறிந்து, அவர்கள் சரணடைந்து, அதை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று சொன்னால், அ : நான் அப்படிப்பட்டவன் கிடையாது, என்றும் ஆ : நான் அது போன்ற மக்களிடம் பழக கூடமாட்டேன், என்றும் சொல்வார்கள். (சிரிப்பு) எனக்கு, அது ஒரு வருட கால தெருச் சண்டை. அது ஒரு மல் யுத்தம். வடுபடத்தக்க தன்மை, என்னை தள்ளியது. நான் அதை பின்னே தள்ளினேன். நான் சண்டையில் தோற்றேன். ஆனால், என் வாழ்க்கையை மீட்டுக் கொண்டேன்.
அதற்கு பிறகு, நான் ஆராய்ச்சிக்கு மீண்டும் சென்றேன் அடுத்த இரண்டு வருடங்கள் அதில் கழித்தேன். முழுமனதுடன் வாழ்பவர்களை, பற்றி சரியாக புரிந்துக்கொள்ள, அவர்களுடைய விருப்பங்களை எப்படி தேர்வு செய்கிறார்கள், மற்றும் நாம் என்ன செய்கிறோம் வடுபடத்தக்க தன்மையை கொண்டு. நாம் ஏன் அதனுடன் போராடுகிறோம்? வடுபடத்தக்க தன்மையுடனான போராட்டத்தில், நான் மட்டும் தனியாக உள்ளேனா? இல்லை. நான் இதை தான் கற்றுக்கொண்டேன். நாம் வடுபடத்தக்க தன்மையை மரத்துப்போக செய்கிறோம் -- நாம் அந்த அழைப்புக்காக, காத்திருக்கும் போது. வேடிக்கையாக, நான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இல், ஒன்றை கேட்டேன். "நீங்கள் வடுபடத்தக்க தன்மை எப்படி வரையறுப்பீர்கள்? எது உங்களை வடுபடச் செய்யும் என்று உணர்கிறீர்கள்?" ஒன்றரை மணி நேரத்தில், எனக்கு 150 பதில்கள் கிடைத்தன. ஏனென்றால், நான் அறிய விரும்பினேன் வெளியுலகத்தில் என்ன உள்ளது என்று. என்னுடைய கணவனிடம் உதவி கேட்பது, ஏனென்றால் எனக்கு உடம்பு சரியில்லை, நாங்கள் புதிதாக திருமணமானவர்கள்; என் கணவனிடம் உடலுறவை தொடங்குவது; என் மனைவியிடம் உடலுறவை தொடங்குவது; மறுப்பை ஏற்பது; இன்னொருவரோடு வெளியே செல்ல அவரிடம் கேட்பது; டாக்டர் அழைப்புக்காக காத்திருப்பது; வேலையிலிருந்து நீக்கப்படுவது; மற்றவர்களை வேலை விட்டு நீக்குவது -- இத்தகைய உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம். வடுபடத்தக்க உலகத்தில் நாம் வாழ்கின்றோம். அதை சமாளிக்கும் வழிகளில் ஒன்றாக, நமது வடுபடும் தன்மையை மறத்துபோக செய்கிறோம்.
அதற்கு ஆதாரமும் உண்டு என்று நினைக்கிறேன் -- இந்த ஆதாரம இருப்பதற்கு, இது மட்டும் காரணம் கிடையாது, ஆனால் இது தான் ஒரு பெரும் மூலக்காரணமாக உள்ளது -- நாம் தான் அதிகபடியான கடன்களில் சிக்கியுள்ள, மிகவும் குண்டாகி கொழுத்த, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ள, மருந்துகளை சார்ந்து உயிர் வாழும் தலைமுறையினர், அமெரிக்க வரலாற்றிலேயே. பிரச்சினை என்னவென்றால் -- இதை நான் ஆராச்சியிலிருந்து அறிந்து கொண்டேன் -- உங்களால் உணர்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து மரத்துபோக செய்ய முடியாது. நீங்கள் இவ்வாறு சொல்ல முடியாது, இது தான் கெட்ட விஷயங்கள். இதோ வடுபடத்தக்க தன்மை, இதோ துக்கம், இதோ அவமானம், இதோ பயம், இதோ ஏமாற்றம், நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. நான் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிட போகிறேன். (சிரிப்பு) நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. எனக்கு தெரியும் நீங்கள் இதை புரிந்து கொண்டு தான் சிரிக்கிறீர்கள். என்னுடைய பணியே உங்களுடைய வாழ்க்கையை பற்றி அறிவது தானே. கடவுளே. (சிரிப்பு) நீங்கள அத்தகைய கடினமான உணர்வுகளை மறத்துபோகச் செய்ய முடியாது, அதன் பின்விளைவுகளை மறத்துபோக செய்யாமல். நமது உணர்ச்சிகளை, நீங்கள் தேர்ந்தெடுத்து மறத்துப்போக செய்ய முடியாது. அதனால், நாம் எப்போது அதனை மறத்துபோக செய்கிறோமோ, அப்போது நாம் மகிழ்ச்சியை மறத்துபோக செய்கிறோம், நாம் நன்றியறிதலை மறத்துபோகச் செய்கிறோம், நாம் சந்தோஷத்தை மறத்துபோக செய்கிறோம். அதற்கு பின், நாம் வாழ்க்கையை வெறுத்து சோகமாகிறோம். நாம் நம்முடைய நோக்கம் என்ன, இதற்கு அர்த்தம் என்னவென்று தேடுகிறோம், அதற்கு பிறகு நாம் வடுபடத்தக்கவர்களாக உணர்கிறோம், அதனால் நாம் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிடுவோம். இது ஒரு ஆபத்தான சுழற்சியாக மாறுகிறது.
ஒரு விஷயம், நாம் யோசிக்க வேண்டியது என்று நினைக்கிறேன். அது என்னவென்றால், நாம் ஏன் மற்றும் எப்படி மறத்துபோக செய்கிறோம். இது ஒரு அடிமைத்தனமாக மட்டும் இருக்க வேண்டாம். மற்றொரு விஷயத்தையும் நாம் செய்கிறோம், நாம் நிச்சயமற்ற அனைத்தையும், நிச்சயமாக உள்ளவாறு செய்கிறோம். மதம், ஒரு பக்தி மற்றும் மர்மம் கொண்ட ஒரு நம்பிக்கையிலிருந்து கட்டாயமாய் நேரிடக்கூடிய உறுதிப்பாட்டு நியதி ஆகிவிட்டது. நான் தான் சரி. நீ செய்வது தவறு. வாயை மூடு. அவ்வளவு தான். நிச்சயமாக, இது தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். நாம் இவ்வளவு பயப்படுகிறோமோ, அவ்வளவு வடுபடத்தக்கவர்கள் ஆகிறோம், அவ்வளவு பயப்படுகிறோம். இன்று அரசியல் இப்படி தான் காட்சியளிக்கிறது. இனிமேல், உரையாடல்கள் கிடையாது. இனிமேல், பேச்சுவார்த்தைகள் கிடையாது. வெறும் குற்றச்சாட்டுகள் தான் உண்டு. ஆராய்ச்சியில், குற்றச்சாட்டு எவ்வாறு விவரிக்கப்படுகிறது என்று தெரியுமா? நம் வலிகளையும், அசௌகரியங்களையும், வெளியேற்றுவதற்கான ஒரு வழி. நாம் குற்றமற்றவர்களாக இருக்க முயல்கிறோம். யாரேனும் தான் வாழும் வாழ்க்கை, இப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது நானாக தான் இருக்கும் ஆனால், அது அப்படி அமைவது இல்லை. ஏனென்றால், நாம் என்ன செய்கிறோம் என்றால் நம் பிட்டத்தில் உள்ள சதையை எடுத்து நம் கன்னங்களில் ஒட்டிக் கொள்கிறோம். (சிரிப்பு) இதை நான் நம்புகிறேன் ஒரு நூற்றாண்டில், மக்கள் திரும்பி பார்த்து, "அடே" என்று சொல்வார்கள்.
நாம் சரி செய்ய நினைப்பது, மிக அபாயகரமாக, நம் குழந்தைகளை. நான் நம் குழந்தைகளை பற்றி என்ன நினைக்கிறோம், என்பதை சொல்லப்போகிறேன். அவர்கள் போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளனர், பிறந்தபோது. ஆனால், நாம் அந்த குற்றமற்ற பச்சிளங் குழந்தைகளை, கையில் கொள்ளும் போது, நமது வேலை இதுவாக இருக்கக்கூடாது, "அடே, பார் இவளை. பரிபூரணமாக உள்ளாள். எனது வேலை இவளை இவ்வாரே, பரிபூரணமாக குறைபாடற்றவளாக வைத்துக் கொள்ளவதே -- ஐந்தாம் வகுப்புக்குள் டென்னிஸ் டீம் சேர்த்து விட வேண்டும், யேல் பள்ளிக்கு ஏழாம் வகுப்பிலே சேர்த்து விட வேண்டும்." அது நம் வேலை கிடையாது. நமது வேலை, அவர்களை பார்த்து சொல்ல வேண்டும், "உனக்கு தெரியுமா? உனக்கும் குறைப்பாடுகள் உண்டு. நீ போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளாய். ஆனால் நீ அன்பிற்கும், பிறருடன் சொந்தம் கொண்டாடுவதற்கும், தகுதியாய் உருவாக்கப்பட்டவள்." அது தான் நமது வேலை. என்னிடம் காட்டுங்கள், இவ்வாறு சொல்லி வளர்த்த குழந்தைகளை கொண்ட தலைமுறையை. அப்படியானால், நாம் இன்று பார்க்கும் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ, அது மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்று. நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் இதை செய்கிறோம். நாம் நம் நிறுவனங்களில் இதை செய்கிறோம் -- ஒரு பிணையாக இருக்கட்டும், ஒரு எண்ணெய் கசிவாக இருக்கட்டும், ஒரு மீள்அழைப்பாக இருக்கட்டும் -- நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதனால் பிற மக்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை என்று. நான் நிறுவங்களுக்கு சொல்ல விழைவது, இது ஒன்றும் புதிதாக நடக்கும் ஜல்லிக்கட்டு கிடையாது. எங்களுடைய விருப்பம், நீங்கள் நம்பகத்தன்மையுடன் உண்மையாக இருந்து, இதை சொல்லவதே, "எங்களை மன்னிக்கவும். நாங்கள் இதை சரி செய்துவிடுவோம்."
இன்னொரு வழியுமுண்டு, அதை கூறிக்கொண்டு நான் விடைபெறுகிறேன். இதை தான் நான் கண்டு அறிந்தேன்: மற்றவர்களுக்கு நாம் நாமாக தெரிய வேண்டும், ஆழமாக தெரியப்பட வேண்டும், காயப்பட கூடிய அளவிற்கு, தெரியப்பட வேண்டும்; முழுமனதுடன் அன்புக் கொள்ள வேண்டும், எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் -- அது மிகவும் கடினமானது. நான் ஒரு தாயாய் சொல்கிறேன், அது கடுவேதனை தரக்கூடிய கடிமான செயல் -- நன்றிக் கடனும், மகிழ்ச்சியையும் கடைப்பிடிக்க அந்த அச்சுறுத்தும் தருணங்களில், நாம் நினைக்கும் போது, "நான் உன்னை இவ்வளவு நேசிக்க முடியுமா? நான் இதை இவ்வளவு அதீத ஆர்வத்துடன் நம்ப முடியுமா? நான் இதை பற்றி இவ்வளவு மூர்க்கமாக இருக்க முடியுமா?" அத்தருணங்களில், நாம் சற்று நின்று, என்ன விபரிதங்கள் நடக்குமோ என்று எண்ணி பயப்படாமல், சொல்ல துணிய வேண்டும், "நான் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன், ஏனென்றால் நான் காயப்பட கூடிய நிலையில் உள்ளேன் என்றால், நான் உயிரோடு துடிப்புணர்வுடன் வாழ்கிறேன் என்று அர்த்தம்." கடைசியாக, நான் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதும் ஒன்று, நாம் போதுமானவர்கள் என்ற மனநிறைவுடன் நம்புவது ஆகும். ஏனென்றால், நாம் அந்த நம்பிக்கையுடன் வேலை செய்தால், நான் போதுமானவன் என்ற மன நிறைவு அளிக்கும் நம்பிக்கையுடன் வேலை செய்தால், நாம் கத்தி அலறுவதை விட்டுவிட்டு, நாம் செவி சாய்த்து கேட்க தொடங்குவோம், நம்மை சுற்றி உள்ளவர்களிடம், அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம், மற்றும், நாம் நமக்கே அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
பிரீன் பிரவுன், ஆராய்ச்சி செய்வது, மனித இணைப்புகளைப் பற்றி -- நாம் பிறருடைய உணர்வை அறிந்து செயல்படும் திறனை, பிறரிடம் சொந்தம் கொண்டாடும் திறனை மற்றும் அன்புக்கொள்ளும் திறனைச் சார்ந்தது. TEDxHouston இல் நடந்த மாநாட்டில், தமது நகைச்சுவை கலந்த சொற்பொழிவில், நம் மனங்களில் ஆழமாக பதியும் முறையில், அவர் தமது ஆராய்ச்சியில் கற்றுக்கொண்ட ஆழ்ந்த உள்நோக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். தம்மைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியும் அறியச் செய்த, ஒரு தனிப்பட்ட தேடலில் தம்மை அழைத்துச் சென்ற, ஆராய்ச்சிப் பற்றி பேசுகிறார். எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடிய, ஒரு அற்புதமான சொற்பொழிவு இது.
Brené Brown studies vulnerability, courage, authenticity, and shame. Full bio »
Translated into Tamil by Pavithra Solai Jawahar
Reviewed by Tharique Azeez
Comments? Please email the translators above.
20:38 Posted: Mar 2012
Views 2,464,025 | Comments 511
12:30 Posted: Jan 2011
Views 610,431 | Comments 534
20:45 Posted: Feb 2009
Views 1,578,518 | Comments 444
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.